Skip to main content

தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், தோழியும் உயிரிழப்பு! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

electric fence set by the father two person incident police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், அவருடைய தோழியும் பலியாகினர்.

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவருடைய மகன் தசரதன் (வயது 26). இருவரும் விவசாயிகள். தசரதனுக்கு  திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இதே ஊரைச் சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவரை சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா, கணவரை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். ஆரம்பத்தில் தசரதனும், சத்யாவும் நட்பாக பழக தொடங்கினர். இதுவே அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.  

 

இந்நிலையில் ஜூலை 29- ஆம் தேதி, சத்யா தன்னுடைய அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாகக் கூறி, தனது குழந்தையுடன் சுபேதார்மேடு பகுதிக்கு வந்துள்ளார். 

 

அங்கு தசரதனை சந்தித்துள்ளார். எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற தசரதன், அங்குள்ள இரும்பு கொட்டகையில் சத்யாவுடன் இரவில் தனிமையில் இருந்துள்ளார். சத்யா, தனது குழந்தையை அந்த கொட்டகையில் தொட்டில் கட்டி தூங்க வைத்துள்ளார். 

 

இதற்கிடையே, ஜூலை 30- ஆம் தேதி காலை அந்த வழியாக சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது அந்த கொட்டகையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது, தசரதன் மற்றும் தோழி சத்யா ஆகியோர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்தது. 

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகாராஜாகடை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் மகாராஜாகடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இருவரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. 

 

இரும்பு கொட்டகையில் இரவு நேரத்தில் வரும் சில மர்ம நபர்கள், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை தடுப்பதற்காக, இரும்பு கொட்டகையைச் சுற்றிலும் தாமோதரன் மின்வேலியை அமைத்துள்ளார். 

 

இதையறியாத தசரதன் சத்யாவுடன் அங்கு சென்றுள்ளார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகள், மின் வேலியில் மோதியதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்துள்ளனர். 

 

இதையடுத்து தசரதனின் தந்தை தாமோதரனை காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை வைத்த மின்வேலியில் மகனும், தோழியும் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.