Skip to main content

வீட்டில் திருட சென்றவர் மின்சார வேலியில் சிக்கி மரணம்!!!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
police investigation

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஐவதுகுடி பள்ளக்காடு. இந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இறந்தவரின் படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த சிலர் இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கரா பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். இறந்து கிடந்தவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த 61 வயது ஏழுமலை என்பதும் இவர் தற்போது நீமங்கலம் கிராமத்தில் குடும்பத்தினர்கள் வசித்து வருவதாகவும் கொங்கராபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த இவர் மீது கள்ளக்குறிச்சி திட்டக்குடி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில், 13 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பகலில் இறைச்சிக் கடையில் வியாபாரம் செய்துவிட்டு, இரவில் கிராமங்களுக்குள் சென்று வீடுகளில் திருடுவது ஏழுமலையின் தொழிலாக செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் நடு இரவு நேரத்தில் ஏழுமலை, ஐவதுகுடி கிராமத்திற்கு திருடுவதற்காக வந்துள்ளார். அந்த ஊரில் உள்ள வீரமுத்து மனைவி, பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஏழுமலை திருட முயற்சி செய்யும்போது, கடா முடா சத்தம் கேட்ட பழனியம்மாள் விழித்துக் கொண்டார். அவர் திருடன்..... திருடன்..... என்று சத்தம் போட்டுள்ளார். 

இதனால் பயந்துபோன ஏழுமலை வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பழனியம்மாள் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை துரத்தியுள்ளனர். ஆனால் திருடன் ஏழுமலை காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி விட்டார். இந்த நிலையில் அவர் தப்பி ஓடிய வழியில் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது விவசாய நிலத்தில் மரவள்ளி பயிறு செய்திருந்தார் அதை வனவிலங்குகள் அழித்துவிடும் என்பதால் அந்த பயிரை பாதுகாக்க நிலத்தைச் சுற்றி இரவில் மின் வேலி போட்டு இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடிய ஏழுமலை, மின்வேலியில் சிக்கி உயிரழுந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் ஏழுமலை குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழுமலை உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.