சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் 1200 பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில் முதற்கட்டமாக 500 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்துகளின் முதல் சேவையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி (30.06.2025) தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகள் 30ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளது.


இந்த 120 மின்சார பேருந்துகளும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த அண்டு இறுதிக்குள் சுமார் 625 மின்சார பேருந்துகளை இயக்குதற்கான நடவடிக்கைகளைச் சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் எடுத்து வருகிறது. முன்னதாக ஜூன் 3ஆம் தேதி இந்த பேருந்துகளின் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பேருந்துகளுக்கான மின்சார இணைப்புகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஜூன் 30ஆம் தேதி மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.