
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி (60) கடந்த 21ஆம் தேதிஉடல்நலக்குறைவால் காலமானார். கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 10 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த அமுல் கந்தசாமி திடீரென உயிரிழந்ததால், வால்பாறை தொகுதி காலியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு 2026இல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், காலியாகியுள்ள வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள் எம்.எல்.ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதிவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை’ என்று கூறப்பட்டுள்ளது