election commission dmk party chennai high court

80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவை எதிர்த்து, தி.மு.க. தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 15- ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Advertisment

தேர்தலின்போது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை மற்றும் ஆயுதப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக, தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்குத் தபால் வாக்குப் பதிவு செய்யும் வகையில், தேர்தல் ஆணையம், சட்டத்திருத்தம் கொண்டு வந்து அறிவித்தது.

Advertisment

தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிதான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால்,முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அரசுக்கு பொருளாதாரச் சுமை அதிகரிக்கும் எனவும், 80 வயதுக்கு மேலானவர்களைச் சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை எனவும் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பிலும், மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் துரை என்பவர் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், ‘இந்தப் புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும். தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் இடைக்கால பதில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் கோரப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பிலும் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,‘சட்டப்பிரிவையே எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளோம். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறலாம்.அதனால், தி.மு.க. தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ எனக் கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தி.மு.க. தொடர்ந்த வழக்கு, பிப்ரவரி 15- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.