வாக்காளர் பட்டியல் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, தனது மாவட்டத்தின் கீழ் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சமர்ப்பித்த படிவம் 7-ன் கீழ் இறந்தவர்கள் குறித்து, வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களை நீக்குவதற்காக, வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகளின்போது கொடுக்கப்பட்டிருந்த மனுக்களின் மீது, தமிழக தேர்தல் ஆணையம், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் இருக்கிறது. ஆகவே, இதுகுறித்து தக்க ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனுவினை சமர்ப்பித்திருந்தார்.
அந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. ஆகவே, சிற்றரசு சார்பாக மனுராஜ், கே.ஜே.சரவணன் மற்றும் ஜே.பச்சையப்பன் ஆகிய கழக வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சமர்ப்பித்த படிவங்களின் அடிப்படையில், இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் எனக் கோரி, அதை தமிழக தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அப்படி நடந்தால்தான் இந்த தேர்தல் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ரிட் மனு தாக்கல் செய்தார்கள்.
அந்த மனு மீது, நீதியரசர்கள் சத்தியநாராயணன் - நக்கீரன் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது, இந்த வழக்கில் மனுராஜ் ஆஜராகி வாதிட்டதின் அடிப்படையில், அவரது வாதத்தினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இரண்டு வாரங்களுக்குள் மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், படிவம் 7-ல் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது குறித்து மனுதாரருக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கினை முடித்து வைத்தார்கள்.