தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தநிலையில் இந்த தேர்தலின்போது சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கேட்டுப்பெற்றது.
இந்தநிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள 5 வார்டுகளில் 7 வாக்கு சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வண்ணாரப்பேட்டையில் வார்டு எண் 51-ல் 1174-வது வாக்கு சாவடியிலும், பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் வார்டு எண் 179-ல் 5059-வது வாக்குசாவடியிலும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரை திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17-ல் வாக்குச்சாவடி 17 w-விலும், அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வாக்குச்சாவடிகள் 16 m, 16 w-விலும் நாளை மறுவாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25-ல் 57 m, 57 w நாளைய தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.