தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், சரிபார்த்தல் பணி கடந்த டிசம்பர் 9 தேதி நிறைவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி, பெண் வாக்காளர்கள் 3.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 8,027 பேர் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 6.66 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் என்றும், 1.7 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறிய தொகுதி சென்னை துறைமுகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.