election advertising DMK sought the court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

Advertisment

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களின் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.