Skip to main content

பிச்சை எடுத்தவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், சிகிச்சையும் வழங்க உத்தரவிட்ட  ஆட்சியர்...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மாவட்டம் முழுவதும் எழும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 

கரோனா தொடங்கிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதை அறிந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. 
 


கொத்தமங்கலத்தில் 95 வயது முதியவர் தள்ளாத வயதிலும் பனைமரம் ஏறி நூங்கு வெட்டி இறக்கி விற்பனை செய்து வருகிறார். அவருக்கு மாதாந்திர முதயோர் உதவித் தொகை கிடைக்க நடவடக்கை எடுக்க மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மூலம் கோரிக்கை வைத்தோம். அடுத்த நாளே அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியரின் காரில் அழைத்து வரச் செய்து உதவித் தொகைக்கான உத்தரவை முதியவருக்கு வழங்கினார். இப்படி ஏழைகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை நகரில் ஒரு விழாவிற்குச் சென்றவர் விழா தொடங்க சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டதால் எதிரில் உள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலய வளாகத்திற்குள் சென்றார். அப்போது தேவாலய நுழைவாயிலில் 6 முதியவர்கள், மற்றும் மூதாட்டிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் விசாரித்தவர், அவர்களிடம் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் இனிமேல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறியதுடன் அருகில் நின்ற அதிகாரிகளிடம் உடனே உதவித் தொகை கிடைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். 
 

 


அப்போது ஒரு மூதாட்டி எழுந்து நிற்க முடியாமல் உடல் நலமின்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து விசாரித்த ஆட்சியர் உமாமகேஸ்வரி, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த உத்தரவுகளைப் பார்த்து நெகிழ்ந்த முதியவர்கள் கண்கள் கலங்க கைகூப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறினார்கள். கூடியிருந்த மக்களும் மாவட்ட ஆட்சியரை நன்றியோடு பார்த்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.