Skip to main content

பூட்டிய வீட்டினுள் வயதான தம்பதியினர் மர்ம மரணம்; காவல்துறை தீவிர விசாரணை

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

vElderly couple mysterious death! Police investigation!

 

கரூர் ஜவகர் கடைவீதி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 75). இவர், கரூரில் இயங்கிவரும் ஒரு பிரபல வங்கியில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்ரீ லக்ஷ்மி (வயது 70). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீலக்ஷ்மி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையில்  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் ராமகிருஷ்ணன் தன்னுடைய பணி நிறைவு காலத்திற்கு பிறகு முழுமையாக கவனித்து வந்திருக்கிறார். 

 

நேற்று இரவு இவரது மகள்கள் செல்போனில் பேசியுள்ளனர். ஆனால், இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டபோது முதியவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதன் காரணமாக அவர்களது மகள்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்த போது வீட்டினுள் கதவு தாழிடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் சமையல் அறையிலும், மனைவி படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

அவர்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கரூர் மாநகர போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்கின்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்