Skip to main content

கரோனா காலத்தில் கையிலிருந்ததும் செல்லாக்காசு!!! உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்...

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

erode

 

இந்தியாவில் வாழும் மக்களில் முப்பது சதவீதம் பேர் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். இரவில் உணவில்லாமல் தூங்கும் பரிதாபகரமான நிலையில் உள்ள லட்சக்கணக்கான மக்களும் இங்கு உண்டு. அன்றாடம் உழைத்து அதன் மூலம் பசியை போக்கும் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பிச்சை எடுத்து பசியாறும் மக்கள் என இப்போதும் இந்திய தேசம் வறுமையுடன் பின்னி பிணைந்திருக்கிறது. ஆனால் இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது என்று மத்திய பா.ஜ.க. அரசு எத்தனையோ வெற்று விளம்பரங்களை வெளியிடுகிறது அதே போல் அதன் செயல்பாடும் உள்ளது. அதில் ஒன்று தான் கருப்பு பணம் ஒழிக்கப்படுகிறது என்று கூறிவிட்டு ஒரு நாள் இரவில் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பட்ட துன்ப துயரம் அது ஒரு நீண்ட பதிவு. அப்படியொரு நடவடிக்கையை அறியாத மனிதர்கள் இப்போதும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த செய்தி.

 

erode


ஈரோடு மாவட்டம், அந்தியூரைடுத்த பொதிய முப்பனூர் பகுதியை சேர்ந்த வயதானவர் சோமு இவர் பார்வையற்றவர். இவரது மனைவி பழனியம்மாள், இவருக்கும் காலில் குறைபாடு உள்ளது. இருவரும் மாற்றுத்திறனாளிகள்.  இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.  இந்நிலையில் இந்த தம்பதியினர் நீண்ட காலமாக சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை சென்ற சில வருடங்களுக்கு முன்பு இவரது வயதான  தாயிடம் கொடுத்து வைத்திருந்தார். இப்போது கரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் செலவுக்கு திணறிய சோமு தன் தாயிடம் செலவுக்காக தான் சேர்த்து வைத்திருந்த அந்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

 

அவரது தாய் ஏற்கனவே அந்த பணத்தை வீட்டில் இருந்த ஒரு பானையில் துணியில் கட்டி வைத்திருந்தார். மகன் பணம் கேட்டதால் அந்த பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை வாங்கிய சோமு அதை தனது செலவுகளுக்காக கடையில் கொடுத்து மாற்ற சென்றபோதுதான், அந்த பணம் பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட செல்லாத நோட்டுகள் என்ற அதிர்ச்சியான தகவல் அவருக்கு தெரியவந்தது. அதாவது அதில் இருந்தது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். இது செல்லாது என்ற விஷயம் அவருக்கு இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. அதில் 24 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இவை அனைத்தும்  செல்லாது என்று கேள்விப்பட்டு அந்தப் பெரியவர் மன வேதனை அடைந்தார்.

 

erode


அந்த பகுதி செய்தியாளர் ஒருவர் மூலம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த பரிதாப நிலை தெரிவிக்கப்பட்டது. பிறகு சோமு, தனது மனைவியுடன் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் கதிரவனை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார். இதை தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உடனடியாக நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்தார். அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம் 24 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையாக அந்த தம்பதியிடம் கொடுத்தார். இதனால் அவர்கள் அடைந்த  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த தம்பதிகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர், இது நெகிழ்ச்சியாக இருந்தது. பரிதாபம் மோடி தவிக்க விட்டார், கலெக்டர் அவர்களின் சேமிப்பை திரும்ப கொடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.