Skip to main content

காவல்துறை அலட்சியம்; கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதியினர்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021
Elderly couple trying to set fire to collector's office

 

கலெக்டா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களில் சிலர் அடிக்கடி தீ குளிக்க முயற்சி செய்வதால் அதைத் தடுக்கும் விதமாக நாகர்கோவில் கலெக்டா் அலுவலக வாசலில் போலீஸார் நின்று பொதுமக்களைச் சோதனை செய்து கலெக்டா் அலுவலகத்துக்குள் அனுமதித்து வந்தனர். இந்த நிலையில் 17-ம் தேதி போலீஸாரின் சோதனையை மீறி கலெக்டா் அலுவலகத்துக்குள் நுழைந்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதிகளான மருதப்பனும், சரஸ்வதியும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த போலீஸார் விரைந்து சென்று அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய்யை பறித்தனர். 

 

பின்னர் அந்த தம்பதியினரை போலீஸார் விசாரிக்கையில் அந்த தம்பதியினர் கூறியதாவது, “எங்களுக்கு 5 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இதில் 2-ஆவது ஆண் பிள்ளை முருகனை அவரின் மனைவியும் பிள்ளைகளும் அடித்துத் துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நாங்கள் வசிக்கும் வீட்டை முருகனின் பிள்ளைகள் தங்களின் பெயருக்கு எழுதித் தரக் கேட்டு வற்புறுத்தி வந்தனர். ஒரு முறை வயதான எங்கள் இருவரையும் தாக்கவும் செய்தனர். இது சம்பந்தமாக பூதப்பாண்டி போலீஸில் புகார் கொடுத்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் எங்கள் இருவரையும் கொலை செய்து விட்டு வீட்டை எடுப்பதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பும் நியாயமும் கேட்டுத் தான் கலெக்டா் அலுவலகத்தில் தீ குளிக்கும் முடிவுக்கு வந்தோம்” என்றனர். இந்த விவகாரம் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.