Skip to main content

ஸ்ரீரங்கம் கோவிலில் 4ஆம் நாள் ஏகாதசி விழா...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Ekadasi 4th day festival at Srirangam temple ..


ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 4ஆம் நாளான இன்று, நம்பெருமாள் கிருஷ்ணர் சவுரிகொண்டை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். 

 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 15ஆம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 

 

21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 'திருவாய்மொழி திருநாட்கள்' எனப்படும் பகல்பத்து திருநாளின், 4ஆம் நாளான இன்று, காலை 6.35 மணிக்கு நம்பெருமாள் கண்ணனெனும் கருந்தெய்வம் மற்றும் நாச்சியார் திருமொழி அடங்கிய 105 பாசுரத்திற்கேற்ப கிருஷ்ணர் சவுரிகொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், பவள மாலை, முத்துச்சரம், காசுமாலை ஆகிய ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழியெங்கிலும் அரையர்கள் பாசுரங்கள் பாடியதைக் கேட்டபடி, ஆழ்வார்கள் பின்னே புடைசூழ தொடர்ந்துவர, உள்பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளச்செய்தார். அங்கு ஆழ்வார்களுக்கு அருளமுதம்செய்து, பக்தர்களுக்குப் பொது ஜனசேவை கண்டருளினார். திருவாபரணங்கள சூடியபடி அதிகாலைப்பொழுதில் சேவைசாதித்த பூலோக வைகுண்டப்பெருமாளை அர்ச்சுன மண்டபத்தில் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

ஸ்ரீரங்கத்தில் பிரதமருக்கு இந்தியில் வரவேற்பு; வைரலாகும் புரோகிதர்களின் வீடியோ

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Priests write in Hindi on Srirangam Temple to welcome the Pm modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். 

இதனிடையே ஸ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடியை, ஸ்ரீரங்கம் கோவில் தெருவில் புரோகிதர்கள் இந்தியில் எழுதி வரவேற்றிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.