Skip to main content

அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு; தொடரும் பரபரப்பு

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

Effigy burning of Annamalai; The excitement continues

 

தமிழ் மொழி மேம்பாட்டிற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடலூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். 

 

அப்போது பேசிய அவர், “இத்தனை காலமாக மூன்றாவது மொழி இந்தி என்பதை எடுத்துவிட்டு பிரதமர் மோடி மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் பயிலலாம் எனச் சொன்னார். இங்கிலாந்தில் ரிஷிசுனக் பிரதமர் ஆனதிற்கு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த சந்தோசப்படுகிறார். முதல்வர் ரிஷிசுனக்கிற்கு போன் பண்ணிக் கேளுங்கள். எத்தனை மொழி பேசுவீர்கள் என்று. எல்லோரும் ஒரு மொழி இரண்டு மொழி பேசிவிட்டு பிரதமர் ஆனார்களா? 

 

தமிழகத்தில் பாஜகவின் போராட்டம் என்பது முதலும் கடைசியுமாக இருக்கட்டும். மீண்டும் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தை புகுத்த முயற்சித்தால் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கும் பேசும் அளவிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் அவர்கள் பேசுவதை கேட்பதற்கு தயாராக இல்லை” எனக் கூறி இருந்தார். 

 

இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். செய்தியாளர்களை நோக்கி பேசிய அண்ணாமலை ''என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது... நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவர் சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா...நவுருங்க'' என பேசினார். (அமைச்சர் மற்றும் பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசினார்). 

 

இவை அனைத்தையும் கண்டித்து கடலூரில் அண்ணாமலையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவ பொம்மை மற்றும் அவரது உருவப் படங்களை  எரித்து கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்