Skip to main content

’’கல்வித்துறை அதிகாரிகள் பணம் வசூலித்துக் கொடுக்கும் ஏஜன்டுகளே!’’- தனியார் பள்ளிகள் கொதிப்பு

Published on 27/05/2018 | Edited on 27/05/2018
pri


பள்ளிக்கல்வித்துறையின் புதிய அரசாணையால் அங்கீகாரம், கண்காணிப்பு என்ற பெயரில் தனியார் பள்ளிகளை அதிகாரிகள் சுரண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த 18.5.2018ம் தேதி புதிதாக ஓர் ஆரசாணையை வெளியிட்டது. அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த மெட்ரிக் இயக்குநரகம் கலைக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டு இருந்த மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டிஇஓ) ஆகியோர் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு  உள்ளது.

 

இந்த அரசாணை அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளுக்குக் கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்றும், அதிகாரிகள் ஊழல் செய்யவே வழிவகுக்கும் என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மாவட்டந்தோறும் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். இந்த அரசாணை குறித்து அவர் விரிவாக நம்மிடம் பேசினார்.

''அரசாணை எண் 101 அமலுக்கு வருவதால், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறோம், ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதற்குதான் வழிவகுக்கும். கல்வி அலுவலர்கள், அரசியல்வாதிகளுக்கும், உயரதிகாரிகளுக்கும் பணம் வசூலித்துக் கொடுக்கும் ஏஜன்டுகளாகத்தான் செயல்படுவர். 

 

இதுநாள்வரை நடைமுறையில் இருந்து வரும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல் மாவட்ட அளவில் உள்ள ஐஎம்எஸ் பணியிடத்தையும் கலைக்கக்கூடாது. தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அங்கீகாரம், ஆய்வு, விண்ணப்பக்கட்டணம் என 5500 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை பள்ளிக்கல்வித்துறைக்கு செலுத்தி இருக்கிறோம். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தைக் கலைத்துவிட்டால், அந்தப் பணத்தை அரசாங்கம் எங்களுக்குத் திருப்பித் தந்து விடுமா? 

தனியார் பள்ளிகள் தரப்பில் ஏதேனும் முறையீடு என்றால் ஐஎம்எஸ் அல்லது இயக்குநரை அணுகி தீர்வு பெறுவது எளிமையாக இருந்தது. இனிமேல் வட்டார அளவில் நியமிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரியும், எங்களை அதிகாரம் செய்யும் அபாயம் இருக்கிறது. புதிய அரசாணை என்பது தனியார் பள்ளிகளை நசுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இப்படி ஒரு அரசாணை வெளியிடுவது குறித்து எந்தவித பூர்வாங்க ஆய்வுகளோ, தனியார் பள்ளிகளுடனான கலந்தாய்வோ நடத்தாதது ஏன்? 

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக 2556 தனியார் உயர்நிலைப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. காலக்கெடு முடிந்தும் அங்கீகாரம் பெறாத ஒவ்வொரு பள்ளிக்கும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசாங்கமே மீறுகிறது. அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்தும் அதை கண்டுகொள்ளாத அரசுக்குதான் அபராதம் விதிக்க வேண்டும்.

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை எல்லா வகையிலும் சீர்கெட்டுக் கிடக்கிறது. பொதுத்தேர்வு ஆங்கில விடைத்தாள்களைக் கூட தமிழ் ஆசிரியர்களைக் கொண்டுதான் இந்த முறை மதிப்பீடு செய்யப்பட்டது. புதிய பாடப்புத்தகத்தின் அடிப்படையில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. 

 

புதிய அரசாணையில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள பழைய பள்ளிகளிடம் எல்பிஏ, டிடிசிபி, சிஎம்டிஏ சான்றுகள் கேட்கக்கூடாது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமை ச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். தனியார் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக உத்தேச கட்டணத்தையாவது நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,'' என்றார் கே.ஆர்.நந்தகுமார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.