Skip to main content

தமிழ் சாகித்திய அகாதெமி விருது...கல்வி மாநில பட்டியல்...! பெருமன்ற மாநாட்டின் 17 தீர்மானங்கள் 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

  Education State List ...! 17 Resolutions of the General Assembly

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12வது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் 20ந் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 21, 22 என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. முற்போக்கு இலக்கிய தளத்தில் இயங்கும் கவிஞர்கள், நாவலாசிரியர்கள், ஆய்வாளர்கள், தத்துவ மேதைகள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என பன்முக ஆளுமை திறன் கொண்ட சான்றோர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 21ந் தேதி இரண்டாம் நாள் அமர்வில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


1. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் புதிய அரசை தமிழ் மக்கள் தேர்வு செய்தார்கள். இந்தத் தேர்வு தமிழ்நாட்டிற்கு புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்ட ஒரு புதிய அரசு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டுகிறது முதல்வரின் செயல்பாடுகளுக்கு பெருமன்றம் துணையாக இருக்கும் என உறுதியளிக்கிறது.


2. மொழிவழிதான் ஒரு சமூகம் உருவாகிறது. தாய்மொழி வழியில்தான் சிந்தனை எழும் என்பது அறிவியல். ஒரு சமூகம் வாழ, வளர, உயர, தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. தமிழ் படிக்காமலேயே பட்டம் பெற்றுவிடும் அவலம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இடமில்லை. பள்ளிகளில் சில வகுப்புகளுக்கு பாடமொழியாக தமிழ் இல்லை. பயிற்றுமொழி தமிழ் என்ற கட்டாயம் இல்லை. பாடமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருப்பதற்கான பேராற்றல் தமிழுக்கு இருக்கிறது. அந்த ஆற்றலை நடைமுறைக்குக் கொண்டு வரும் குறிக்கோள் அரசுகளுக்கு இருந்திருக்க வேண்டும். தமிழ்ப் பயிற்றுமொழி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அரசுகள் தவறிவிட்டன. பயன்பாட்டு மொழி என்பது பயிற்று மொழி வழியேதான் அறியப்படும்.

 

உலகில் ஓர் அறிவியல் பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு இருக்கிறது. அச்சு ஊடகங்கள், கணினி முதலான மின்னியல் ஊடகங்களில் தமிழ் எளிதாகவும், அழகாகவும் கையாளப்படுவதைக் கண் திறந்து பார்க்க வேண்டும். எத்தனையோ படையெடுப்புகள், இடையூறுகள் இவற்றிற்கிடையே தொன்மை வாய்ந்த நம் தமிழ் அழிந்துவிடாமல் காத்து நமக்கு கையளித்துச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்தத் தமிழை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விரும்புகிறது. எனவே, தொடக்கப் பள்ளித் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழியாகத் தமிழைக் கொண்டு வர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.


3. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டரசு நிறைவேற்றிய ஆட்சிமொழிச் சட்டங்களும், ஆட்சிமொழி தொடர்பான அரசாணைகளும் முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லை என்பது நடைமுறை உண்மை. தங்கள் தாய்மொழியில் அரசு நடைபெறுவது மக்களின் ஜனநாயக உரிமை. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளிவரும் அரசாணைகள் ஆங்கிலத்திலேயே தொடர்வது கவலை அளிக்கிறது. இக்கவலையைப் போக்கும் வண்ணம் தலைமைச் செயலகம் முதல் சிற்றூராட்சி அலுவலகம் வரை எல்லா நிலைகளிலும், எவ்வித விலக்குமின்றி, தமிழை ஆட்சிமொழியாக்குமாறும் அதனைக் கண்காணிக்க அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்குமாறும் தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.


4. ஒரு மாநிலம் ஏற்றுக் கொண்ட ஆட்சிமொழியை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அச்சட்டத்திற்கு இசைவளிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்ட விதிகள் 348 பிரிவு 2இன் வழி வழங்கப்பட்டிருக்கும் உரிமை. பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டரசு ஒருமனதாக உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அப்போதைய ஒன்றிய அரசின் உள்துறை அச்சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்பியது. கொலீஜியம் இச்சட்ட மசோதாவை ஏற்கவில்லை. மேற்கு வங்கம், குஜராஜ், இந்தி பேசும் மாநிலங்களில் அம்மாநில ஆட்சிமொழி வழக்காடு மொழியாக இருக்கிறது. அரசியல் சட்டத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக கொலீஜியம் மேற்கொண்ட முடிவை எதிர்த்து தமிழ்நாட்டரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் முன்வைக்கிறது. தமிழ் மக்கள் தங்களின் மொழி ஜனநாயகத்தை வழக்காடு மன்றங்களில் இழந்துவிட்ட அவல நிலையை தமிழ்நாட்டரசிற்கு பெருமன்றம் சுட்டிக்காட்டுகிறது.


5. ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவுத் தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறது. இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை மறுப்பது, ஒற்றை சமய-வேதகால-கல்வி முறையைக் கொண்டு வருவது, மாநில மொழிகளை வீழ்த்தி சமஸ்கிருத இந்தி மொழியை வலுப்படுத்துவது, பழைமை வாத இலக்குகளை மீட்டெடுப்பது போன்ற அறிவியலுக்கு மாறான கொள்கைகளைக் கொண்டதாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டரசு தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க அறிவாளர் குழு ஒன்றை அமைத்திருப்பதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இதுதொடர்பாக கீழ்காணும் பரிந்துரைகளை கலை இலக்கியப் பெருமன்றம் முன்வைக்கிறது. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என்பது இம்மண்ணின் வரலாற்றையும் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஓர் ஆவணமாக கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். சாதி, மத, பாலின வேறுபாடுகளைக் களையும் சமத்துவ சமூகம் அமைப்பதற்கான சாசனமாக மாநிலக் கல்விக் கொள்கை அமைய வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் கல்வி நிலையங்களில் ஆங்கிலம் போல தமிழும் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும். பயிற்று மொழியாகத் தமிழைக் கொண்டு வர வேண்டும். தற்போதைய ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். தாய்மொழித் தமிழ் போல ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஆங்கிலமொழியில் தன் கருத்துகளைச் சொல்லி எழுத இயலும் வகையில் ஆங்கில மொழிப் பாடம் அமைய வேண்டும். ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பது அதன் புரிதலுக்கும் வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கிறது. தாய்மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் கற்பித்தல் முறை எளிமையாக இருக்க வேண்டும். கல்வி சுமையாக இருக்கக் கூடாது. ஆர்வத்தோடும் பெருவிருப்பத்தோடும் மாணவர்கள் கல்வியைக் கற்கும் நோக்கில் தமிழ்நாட்டரசின் மாநிலக் கல்விக் கொள்கை அமைய வேண்டும். மாணவர்களின் கற்றல் திறனைக் கூர்மைப்படுத்தும் வகையில் மனதை இலகுவாக்கும் விளையாட்டு, கைவினைப் பொருள் தயாரிப்பு போன்ற வகுப்புகள் மீண்டும் கட்டாயமாக இணைக்க வேண்டும். படைப்பாற்றலை உருவாக்கும் வகையிலான பாடத்திட்ட முறையை வலுப்படுத்த வேண்டும். மனப்பாடப் பழக்கம் கடந்து புரிதலை உருவாக்கும் கற்பித்தல் திறனை ஆசிரியர்களுக்கு உருவாக்க வேண்டும்.
 


6. தங்கள் மொழியில் கலை இலக்கியப் படைப்புகள் வளரவும், செழுமையுறவும் இந்திய அளவில் செயல்படும் சாகித்திய அகாடமி போன்ற ஓர் அமைப்பை கர்நாடக, கேரள மாநிலங்கள் உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. அதேபோல, தமிழ்நாட்டிலும் தமிழ் சாகித்திய அகாடமி அமைக்க உரிய நடவடிக்கைகளை மேறகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.

 

7. இந்தி திணிப்புக்கு எதிராக இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி மொழியை ஏற்கக் கட்டாயப்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை மீறி, இந்தி மொழி, தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. தேசீய மொழிகள் என அறிவிக்கப்பட்ட 22 மொழிகளையும் சமமாகக் கருதி இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என பெருமன்றம் வேண்டுகோள் வைக்கிறது. அறிவியல் வளர்ச்சியில் மொழி மாற்றம் எளிதாக அமைந்திருக்கிறது. ஓர் அரசு போல செயல்படும் ஐரோப்பிய ஒன்றியம் பல மொழிகளைக் கையாண்டு வெற்றியுடன் செயல்படுகிறது. பல சான்றுகளில் இதுவும் ஒன்று. மாநில மொழிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் இந்தியை அனைத்து நிலைகளிலும் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.


8. அவசரக் கால நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது எதேச்சாதிகாரமாக மாநிலப்பட்டிலில் இருந்த கல்வியை நடுவண் அரசுப் பட்டியலுக்கு கொண்டு சென்ற முறை மக்களுக்கு எதிரானது. கல்வி என்பது மண் சார்ந்த பண்பாட்டில் உருவாகும் ஒன்று. பன்முகக் கலாசாரங்கள் நிலவும் இந்தியாவில் ஒற்றைக் கல்வி முறை சரியானதல்ல. இந்தியாவின் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறு இந்திய அரசை கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்துகிறது.


9. தமிழர்களின் பண்பாட்டு மையங்களாக கோவில்கள் இருந்துள்ளன. இப்போதும் இருந்து வருகின்றன. தமிழர்கள் தமிழ்நாட்டில் கட்டிய கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக ஏற்கச் செய்ய பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தென்னாடுடைய சிவனுக்கு செந்தமிழ் புரியாது என்ற குரலை அடக்க இயலவில்லை. தமிழிலும் வழிபடலாம் என்பதை ஏற்க இயலாது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள  ஆலயங்கள் அனைத்திலும் இறைவனைத் தமிழ் வழியே வழிபட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.


10. சமூக நீதியைக் காக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைப் பேணும் வகையில், நீட் தேர்வு நடத்துவதில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டரசின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு இசைவளிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. நீட்டைத் தொடர்ந்து கலை அறிவியல் உள்ளிட்ட எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வருவது தமிழ் மாணவர்களை உயர்கல்வி ஆசையில் இருந்து, முயற்சியில் இருந்து அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையாகத் தெரிகிறது. கல்வி கற்பதற்கே நுழைவுத் தேர்வு என்ற முறை, மக்களுக்கு கல்வியூட்டும் அரசின் அடிப்படைக் கடமையில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கை என கலை இலக்கியப் பெருமன்றம் கருதுகிறது. எல்லாத் தரப்பு மக்களும் விரும்பும் அத்தனைப் படிப்புகளையும் படிப்பதற்கான கட்டமைப்புகளை தாராளமாக உருவாக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.
  


11. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், திரைப்பட நடிகர் சங்கத்தின் ஒரு கிளை அமைப்பாகச் செயல்படுவதாக பொதுக் கருத்து இருக்கிறது. கலை, இலக்கியம், ஓவியம், கூத்து முதலான துறைகளில் தமிழர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இயல் இசை நாடக மன்றம் செயல்பட வேண்டும். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அந்த அமைப்பைச் செம்மைப்படுத்துமாறு தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.


12. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலைகாரர்களைத் தப்பிக்க விடாமல் தண்டிக்கச் செய்யவும், சாதி, மத மறுப்புத் திருமணங்களை செய்து கொள்வோரைப் பாதுகாக்கவும் சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கைவிடுக்கிறது.


13. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனரும் விடுதலைப் போராட்ட வீரரும், ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து போராடியவருமான இலக்கியப் பேராசான் ப. ஜீவானந்தம் பெயரில் இலக்கிய விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.


14. தமிழ்நாடு அரசு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை  முறையாக செயல்படுத்தவும், மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி, அவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கி, அனைத்து வகையான சலுகைகளும் கடைக்கோடி கிராமங்களிலுள்ள கலைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். கலைஞர்களுக்கான பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும், நலிவுற்ற கலைஞர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் தீட்டவும் வேண்டும் என மாநில அரசை கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.


15. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேநேரத்தில், இந்த வாரியத்திலும் மாநிலம் முழுவதும் உள்ள வட்டார பத்திரிகையாளர் வரை அனைவரையும் இணைக்கவும், நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்று சேரும் வகையிலான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.


16. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமையான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிக்கு சாத்தூர் நகரில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.


17. பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்ட முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கலை  இலக்கியப் பெருமன்ற மாநாடு கோருகிறது.


மேற்கண்ட 17 தீர்மானங்களை நிறைவேற்றி தமிழக அரசிடம் இவைகளை கோரிக்கைகளாக வைத்துள்ளது பெருமன்றமாநாடு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.