Skip to main content

கையாடல் செய்த கல்வி அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை... ரூபாய் 3.79 லட்சம் அபராதம்... விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

Cash

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 1993-95 கல்வி ஆண்டின் போது உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியில் இருந்தவர் தற்போது 73 வயதுள்ள ரகுபதி. இளநிலை உதவியாளர் அமானுல்லா பாலி, அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் இவர்கள் சேர்ந்து உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணி செய்து வந்த ஆசிரியர்கள் 68 பேருக்குச் சேரவேண்டிய சம்பள பணம் 7,40,087 ரூபாய் கையாடல் செய்துள்ளனர்.

 

இது சம்பந்தமாக புகார்கள் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். அதையடுத்து அப்போதைய மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக உளுந்தூர்பேட்டை தொடக்கக் கல்வி அலுவலகம் சென்று ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வின் முடிவில் ஆசிரியர்களின் சம்பளப் பணம் கையாடல் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்படி மூவர் மீதும் ஊழல் தடுப்பு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறை இவர்கள் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

 

அப்போதைய தென்னாற்காடு மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக இருந்த முகமது பஷீர் அவர்கள் தீவிர விசாரணை செய்து மேற்படி மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அந்த வழக்குத் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. தற்போது விழுப்புரம் ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

அந்தத் தீர்ப்பில் மேற்படி மூவரும் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளத்தைக் கையாடல் செய்த உதவி தொடக்க கல்வி அலுவலர் ரகுபதிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 3.79 லட்சம் அபராதமும், இளநிலை உதவியாளர் அமானுல்லாவிற்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 1.82 லட்சம் அபராதமும், தலைமையாசிரியர் கண்ணனுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 2.70 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த ஊழல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. தவறு செய்தவர்கள் ஆண்டுகள் பல கடந்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு உதாரணம் என்கிறார்கள் இதில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள். அவர்களின் பெரும்பாலோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இருந்தும் அவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.