Skip to main content

அந்த வீடியோவில் இருப்பது எடப்பாடி பழனிசாமியா? கே.சி.பழனிசாமி பதில்...

Published on 27/09/2019 | Edited on 28/09/2019

''என்ன ஒரு தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிசாமியையும் ஒரே மேடையில் வைத்து செங்கோலை பிடிக்க செய்திருக்கிறார்'' என வாட்ஸ் அப்புகளில் இந்த செய்தியும், அது சம்மந்தமான வீடியோ ஒன்றும் கடந்த சில நாட்களாக பரவுகிறது.

jayalalitha mgr


இந்த வீடியோவில் ஜெயலலிதா செங்கோலை பிடிக்கும்போது, எம்ஜிஆர் ஒருவரை அழைத்து அவரையும் செங்கோல் பிடிக்க சொல்லுவார். அவர் எடப்பாடி பழனிசாமியா? என்று தற்போது உள்ள அதிமுகவினரே இதனை பார்த்து இது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கவும், விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர்.


இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியை தொடர்பு கொண்டோம்.


இடைத்தேர்தல் நடக்கக்கூடிய நேரத்தில் இந்த வீடியோ திடீரென பரவுகிறதே? அந்த வீடியோவில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமியா?


''எப்போதும் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதிமுக தலைவர் யார் என்பதை கொடி பிடிக்கும் தொண்டன் முடிவு எடுப்பான் என்று எம்ஜிஆர் சொல்லுவார். அதற்காகத்தான் பொதுச்செயலாளர் தேர்வு கூட அடிப்படை தொண்டன் உள்பட அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதியை கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் ஒரு செங்கோலை கொடுக்கும்போது கூட சாதாரண அடிப்படை தொண்டரை அழைத்து கொடுக்க சொல்கிறார். அந்த தொண்டர் எடப்பாடி பழனிசாமி இல்லை.

 

edappadi in that video? KC Palanisamy's response...


இந்த வீடியோவில் உள்ள மாநாடு நடந்த ஆண்டு 86. அதிமுகவின் தொடக்கக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லை. 88ல்தான் அதிமுகவில் அவர் சேருகிறார். முழுக்க முழுக்க அவர் சசிகலா ஆதரவாளர். ஜெ அணி, ஜானகி அணி என்று இருந்தபோது, ஜெ. அணியின் எடப்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. சேவல் சின்னத்தில் அவர் வெற்றி பெற்றாலும், அவர் அமைச்சரானது 2011ல் தான். அதிமுகவில் இருந்த முத்துசாமி 2010ல் திமுகவுக்கு சென்றார். எடப்பாடி தொகுதியில் உள்ள முத்துசாமி திமுகவுக்கு சென்றதால், அந்த பகுதியில் இருந்து ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமியை அமைச்சராக்கினார்கள்.


அதிமுக கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிமானம் இல்லை. தற்போது இந்த எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறார். ஒரு சில டீம், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படி ஒரு வீடியோவை போட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். இது அவருக்கு தெரிந்து செய்தார்களா? தெரியாமல் செய்தார்களா என்று தெரியவில்லை'.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.