அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அரசின் உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு தெரிந்துகொண்டு இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக்கு மாறாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என்று ஆளுநர் கூறுகிறார். இதற்கும் நாங்கள் விளக்கம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். தமிழகம் முதலிடத்தில் உள்ளதைப் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவமும், தாங்கிக்கொள்ளும் சக்தியும் ஆளுநருக்கு இல்லை. விளையாட்டு போட்டிகளில் கூட ஐந்தாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறோம். அதேபோல் பல துறைகளில் முதலிடத்தில் வந்து இருக்கிறோம். இதனையெல்லாம் ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளோம். அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், படிக்க மனம் இல்லாமல் இந்த அரசின் சாதனைகளை, தான் வாசிக்க விருப்பமில்லாமல் பொய்யான கருத்துகளை சொல்லி உள்ளார். ஆளுநர் நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்?. கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.