Edappadi Palaniswami accuses the DMK government

திருநெல்வேலியில், குளிக்கச்சென்ற இரு பட்டியலின இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத்தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “நெல்லையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களைக்கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாகத்தாக்கி சித்திரவதை செய்ததாகப் பத்திரிகை செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது.இக்கொடூர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். இந்த திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்குச் சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

Advertisment

கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து, அவர்களைச் சரமாரியாகத்தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது, இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்தக் கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல், காவல்துறை இந்தச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.