Skip to main content

பணிக்கு வராமல் போராடும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது! எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

பணிக்கு வராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை (அக். 30) இரவு சேலம் வந்து சேர்ந்தார். இன்று (அக். 31) காலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

Edappadi Palanisamy Warning!

 


மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. அமைச்சர்கள் நான்கு நாள்கள் அங்கேயே தங்கி பணியாற்றினர். தீபாவளி, மழையை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டனர். எனினும்,  சிறுவனை உயிருடன் மீட்க முடியாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

முடிந்தவரை அரசு போராடியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து அரசை விமர்சிப்பது சரியாகாது. சிறுவனை மீட்கும் பணியில் ராணுவத்தினரை அழைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எப்) என்பதே துணை ராணுவம்தான். நாம் மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூலமும் பணிகளில் ஈடுபட்டோம். இத்துடன் எல்லோரும் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். ஆழ்துளை கிணறுகள் குறித்து ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பலரும் பணிக்கு திரும்பி விட்டனர். அரசால் அங்கீகரிக்கப்படாத சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும். 


அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் அரசு 1.24 கோடி ரூபாய் செலவு செய்து படிக்க வைக்கிறது. இது மக்களின் வரிப்பணம். மருத்துவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறது. மருத்துவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அளித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.