Edappadi Palanisamy visit Tharumai Adheenam

Advertisment

'ஆன்மிக முதல்வர் எடப்பாடி' எனக் கூட்டத்தில் ஒருவர் சொல்வதைக் கேட்டவுடன் பதறிய தருமை ஆதினம், மெதுவாகப் பேச்சை மடைமாற்றிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, திருக்கடையூர் கோயில், திருவெண்காடு கோயில், வைத்தீஸ்வரன் கோயில் என நவக்கிரக ஸ்தலங்களில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்த சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பாரதியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு தருமபுரம் ஆதீனம் சென்று, ஆதீனகர்த்தரை சந்தித்து, அவரின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அப்போது, பட்டின பிரவேச விவகாரம் குறித்தும், இன்றைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஆதீனத்திடம் பேசினார். மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு, தனது மனைவி குடும்பத்துடன் வந்து இங்கு தரிசனம் செய்ததாகவும் ஆதினத்திடம் தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் எடப்பாடியைப் பார்த்து, 'உங்களை ஆன்மிக முதல்வர் எனப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்' எனக் கூறினார். அதைக் கேட்ட எடப்பாடி, மகிழ்ச்சியில் புளகாங்கிதம் அடைந்தார். மேலும், அந்த நபர் எடப்பாடியைப் பாராட்ட முற்பட்டபோது குறுக்கிட்ட தருமபுரம் ஆதினம், டாபிக்கை மாற்றினார். இதை அங்கிருந்த அனைவரும் கவனித்தனர். இந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தருமை மடத்தை வைத்து அரசியல் கட்சிகள் செய்த அரசியலால் நோந்துபோயுள்ள ஆதினம், தெளிவாக அரசியல் பேச்சுகளைத் தவிர்த்ததாக மடத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.