Skip to main content

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடு; முதல்வர் வாக்குறுதி!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

 

Edappadi Palanisamy says that Concrete house for agricultural laborers
                                                  கோப்புப் படம்


நிலம், வீடு இல்லாத விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் கான்கிரீட்  வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை 100 வறண்ட ஏரிகளில் கொண்டு சென்று நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரி நீரை திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்று செய்து, அதன்மூலம் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலம் 42 ஏரிகளுக்கும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நங்கவள்ளி வழியாக 31 ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும். 

 

இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4238 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும். ஏறக்குறைய 38 கிராமங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயனபெறும் ஏரிகளுக்கு தேவைப்படும் மொத்த நீர் அரை டிஎம்சி. வெள்ள உபரி நீர் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து 30 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 

 

இத்திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மே 6ம் தேதி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் செயல்பட்டு விவசாய மக்களின் நலன் கருதி மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 16,43,000 விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம். 

 

ஐந்து ஆண்டு காலத்தில் இரண்டு முறை பயிர்க்கடனை ரத்து செய்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் வருகின்ற கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் கட்சியினர் குறிப்பிடுவர். ஆனால் அதிமுக அரசு, விவசாயிகள் கோரிக்கை வைத்தவுடன் தேர்தலுக்கு முன்பே அதனை நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் வழங்கப்படும். இப்படி விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி இருக்கிறது.

 

கடைமடை பகுதிகளிலும் தூர்வாரி மேட்டூரில் இருந்து தண்ணீர் கடைமடை வரை சரியாகச் சென்று சேர்ந்த காரணத்தால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், விதைகள், உரங்கள் அனைத்தும் குறித்து காலத்தில் அரசாங்கம் வழங்கிய காரணத்தாலும் கடந்த ஆண்டு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல், அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு நெல் உற்பத்தி செய்தது கிடையாது. இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 27 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் உற்பத்தி செய்தது இல்லை. 

 

தமிழ்நாட்டில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை 10,711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அத்திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் சுத்தமான நீர் கிடைக்கும். 

 

இத்திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் காக்கும் அரசாக திகழ்கிறோம். நிலம், வீடு இல்லாமல் இருக்கும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.