Skip to main content

ஸ்டாலின் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்வது ஏன்?; எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏன் என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப். 29ம் தேதி கலந்து கொண்டார். முகாம் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமி-ழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் குறை சொல்லி வருகிறார். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஆனால் இதுவரை எதையும் நிரூபிக்கவில்லை. உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். திமுக ஆட்சியில்தான் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. 

 

edappadi palanisamy explanation

 

கீழடியில் மூன்று கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு உள்ளார். அந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு. அந்த அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டு குரூப்-2 போட்டித்தேர்வுக்கான வினாத்தாள், பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. இதில் அரசு தலையிட முடியாது. 


பாஜக எங்களுடன்தான் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி தொடரும். பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபையில் தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறைதான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. இந்த தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், மாயனூர் கதவணையை திமுக ஆட்சியின்போதுதான் கட்டியதாக கூறியது தவறு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் மாயனூர் கதவணை கட்டப்பட்டது. அதேபோல் குடிமராமத்துத் திட்டத்தையும் குறை கூறினார்கள். ஆனால் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர் வாரப்பட்டு உள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள் படிப்படியாக தூர் வாரப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர், வீணாக கடலில் கலப்பதாகச் சொல்கிறீர்கள். நம்முடைய நிலப்பரப்பு சமவெளியாக இல்லை. மலைகளுக்கு இடையில் இல்லை. அரை அல்லது ஒரு டிஎம்சி அளவு தண்ணீரை சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நான்கு அல்லது ஐந்து இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உபரிநீர் ஊருக்குள் சென்று விடாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும். மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.