தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு மற்றும் நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவருகிறார்.
இந்நிலையில் இன்று திருவள்ளூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சிப்பணிகள் மற்றும் திட்டங்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர்,12 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், 7,520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
''கிசான் வங்கித் திட்டத்தில் மத்திய அரசுசில சலுகைகளை அறிவித்து இருந்தது. அதை நிறைய பேர் தவறாகபயன்படுத்தியுள்ளார்கள். இப்பொழுது எங்கெல்லாம் இந்த தவறு நடந்து இருக்கிறதோ அங்கெல்லாம் குழு அமைக்கப்பட்டு குழுவின் மூலமாக நிலைமைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மக்கள் நலனுக்காக,அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து நிதி ஆதாரத்தைப் பெருக்கி திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தத்திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும். பல பேர் என்னிடம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா நிறைய செய்கிறீர்கள் விளம்பரம் இல்லை என்கிறார்கள். விளம்பரம் செய்வதற்கு நான் என்ன நடிகனாகவா இருக்கிறேன். பெரிய பெரிய நடிகராக இருந்தால் விளம்பரம் கிடைக்கும். ஆனால்நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்'' என்றார்.