கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு பகுதி மக்களுக்காக ஒரு பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை திறந்துள்ளதன் மூலம் இங்குள்ள மக்கள் நைனாம்பட்டி அரசு மருத்துவமனைக்கும், அங்குள்ள அரசுப்பள்ளிக்கும் செல்ல வேண்டிய தொலைவு குறைந்துள்ளது.
இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். நஞ்சுண்டேஸ்வரர் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே, புதிய திருமண மண்டபம் கட்டப்படுகிறது.
எடப்பாடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக அங்கு புதிய கலைக்கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. வனவாசியில் ரூ.58 கோடியில் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பகுதியில் சிட்கோ தொழில்பேட்டை அமைய உள்ளது.
தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இடைப்பாடி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் திருச்செங்கோட்டில் இருந்து ஓமலூர் வரை நான்கு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படும்.
இடைப்பாடி தொகுதியில் கல்வி, மின்சாரம், சாலைகள் என கிட்டத்தட்ட எல்லா பணிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.