Skip to main content

எனது ஊரின் பெயரில் தனி மாவட்டமா..? -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

 erode

 

பல்வேறு திட்டப் பனிகள் தொடக்க விழா, நல திட்ட உதவிகள் வழங்குதல் என அரசு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டுக்கு வருகை தந்தார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோலியக் குழாய் அமைக்கும் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. விவசாயிகளின் அனுமதியுடன்தான் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த காலங்களில் நிலம் எடுப்புக்கு நிலத்தின் மதிப்பில் 10 சதவீதம் தான் வழங்கப்பட்டது. இப்போது 100 சதவீத இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கையெடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

மின் கட்டணத்தில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 21 ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்.  மின் கட்டண கணக்கீட்டில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. கரோனா காரணமாக மின் கட்டணத்தை வீடு வீடாகச் சென்று கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டது. 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, இரண்டாகப் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மேல் என்ன சந்தேகம் என்பது தெரியவில்லை. வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக, இதைச்சொல்லி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

 

சாயக்கழிவு பிரச்சனை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதில் உண்மை இல்லை. இது தவறான தகவல். 147 சாய ஆலைகள் உள்ளன. இதில் 41 சாய ஆலைகள் தனித்தனியே தங்கள் வளாகத்தில், பூஜ்ய கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி செயல்படுத்தி வருகின்றன. அரசு கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரித்துதான் விட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அரசு கண்காணித்து வருகிறது. எங்காவது தவறு நடப்பதாக அரசு கவனத்துக்கொண்டு வந்தால் நடவடிக்கையெடுக்கப்படும்.    

 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என அரசின் அறிவிப்பு குறித்த விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவத் துறையில் பணியாற்றி வருபவர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என்றும், பிற துறைகளைச் சார்ந்தவர்கள் உயிரிழந்தால் ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் எனவும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் பட்டியலை மொத்தமாக தயாரித்து அரசு வெளியிடும். அதன்பிறகு நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

 

மஞ்சள் விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து செயல்படுத்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.30 கோடி செலவில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.    


            
உலக அளவில் 210 நாடுகளில் கரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கரோனா பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம் தான். நோய்ப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் நோய்ப் பரவலைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரலாம்.


தொழிற்சாலைகளில் 100 சதவீதம் அளவுக்கு பணியாளர்களை வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு  கடன் வசதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி கடன் அளிக்க அரசு நடவடிக்கையெடுத்துள்ளது.

 

http://onelink.to/nknapp

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர் வட்டங்களைப் பிரித்து எடப்பாடி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, இது தவறான தகவல், இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படமாட்டாது என்றார்.  

 

ஞாயிற்றுக்கிழமை போல் பொது முடக்கம் நீடிக்கப்படுமா? என்ற கேள்விக்கு தற்போது வரை அதுபோன்று எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.