Skip to main content

அதிமுக ஓர் இரட்டை மாட்டு வண்டி! ராஜன் செல்லப்பா பேச்சுக்கு பதிலடி!!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

 

அதிமுக ஓர் இரட்டை மாட்டு வண்டி என்று செம்மலை எம்எல்ஏ கூறினார். 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சேலத்தில் இன்று ஆய்வு நடத்தினார். இதில் கலந்து கொள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். அப்போது அதிமுகவின் அமைப்புச்செயலாளரும் எம்எல்ஏவுமான செம்மலை, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9, 2019) கூறியதாவது:

 

ச்

 

சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தேவையில்லாத இடங்களில் பாலங்கள் கட்டப்படவில்லை. 


இரட்டை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா பேசியது, வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் கருத்து கூறும் சுதந்திரம் உண்டு. அவரும் அந்த அடிப்படையில்தான் கருத்து கூறியிருக்கிறார்.


கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்பதை கட்சியின் தலைமை பரிசீலித்து ஒரு நல்ல முடிவை எடுக்கும். இந்த ஆட்சியை பொருத்தளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று மிகச்சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். கட்சியைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுக்கிறார். 


கட்சிக்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. ஒரு தலைமையா? இரு தலைமையா? என்பதை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் முடிவு எடுப்பார்கள். அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். 


ஒற்றை மாட்டு வண்டி இருக்கிறது. அதேபோல் இரு மாடுகள் பூட்டிய வண்டியும் இருக்கிறது. சாலையில் பயணிக்கும்போது இரு வண்டிகளுமே சிறப்பாகவே செயல்படுகிறது. அதனால் ஒரு மாடு பூட்டிய வண்டி வேண்டுமா? இரு மாடுகள் பூட்டிய வண்டி வேண்டுமா? அதில் எது சிறந்தது என்ற விவாதமே தேவையற்றது. 


வண்டி ஒழுங்காக செல்லும்போது எந்த பிரச்னையும் கிடையாது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் நிலைகுலைந்து உள்ளோம். அதை சரிசெய்து, சுதாரித்து எழுந்து வர நிதானம் தேவை. மாறாக திசை திருப்பக்கூடாது. இவ்வாறு செம்மலை எம்எல்ஏ கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக கொடியை பயன்படுத்தினால் ஓபிஎஸ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: செம்மலை அதிரடி!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Legal action against OPS for using AIADMK flag: Chemmalai action!

 

அதிமுக கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை கூறினார்.

 

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் ஏப். 20ம் தேதி, சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க். வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

 

இதையடுத்து, அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறியது:  “அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏன் பிரிந்து சென்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி மீது யாருக்கும் அதிருப்தி கிடையாது. தேர்தல் ஆணைய உத்தரவுக்குப் பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது. 

 

பன்னீர்செல்வம் அணியினர் இனிமேல் அதிமுக கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தத் தகுதி இல்லை. மீறிப் பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காரியத்தை அவர்கள் செய்யமாட்டார்கள். இனி முட்டுக்கட்டையும் போட முடியாது. சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார்.” இவ்வாறு செம்மலை கூறினார்.

 

 

Next Story

“இனி முட்டுக்கட்டை போட முடியாது..” - செம்மலை மகிழ்ச்சி

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

admk semmalai talks about ops team and admk symbol and flag

 

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்றோடு நிறைவு பெறுவதால், நேற்று (19/04/2023) இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்தில் அதிமுகவினர் சார்பில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அவைத் தலைவருமான செம்மலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் ஏன் பிரிந்து சென்றார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி மீது யாருக்கும் அதிருப்தி கிடையாது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது. ஓபிஎஸ் அணியினர் இனிமேல் இரட்டை இலை மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தகுதி இல்லை. அவ்வாறு பயன்படுத்தக் கூடாது. இதனையும் மீறி பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காரியத்தை அவர்கள் செய்யமாட்டார்கள். இனியும் முட்டுக்கட்டையும் போட முடியாது. சட்ட போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார்" என்று தெரிவித்தார்.