Skip to main content

’நா கூசாமல் கேட்கிறீர்களே, பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?’-எடப்பாடி பழனிச்சாமிக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப. சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலைப் பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன் ? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன ?” என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார். 

 

c

 

1984 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த ப. சிதம்பரம்  மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சராகவும், பிறகு,1991 இல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார். 

 

1996 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்.   இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனை பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

 

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை தகர்த்த அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொடர்ந்து, அதே பாதையில் தமது தனி முத்திரையை பதித்தவர். 2004 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அக்கால கட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முதற்கட்டமாக 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார். பிறகு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார். 

 

2008 ஆம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். அதனால் பயனடைந்தவர்களின் பட்டியலை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடச் செய்தவரும் இவரே. இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் சமூக சேவை திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பல மடங்காக அதிகரித்தது. 

 

 ப. சிதம்பரம்  தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்புகள் கூட இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், திருக்குறள் இடம் பெறாமல் இருக்கவே இருக்காது. இதன்மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்த முதல் வேட்டி கட்டிய தமிழரும் இவரே. அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவீதம் கூடுதல் வரி விதித்து வருமானத்தை பெருக்கியவர்.

 

மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதை உணர்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக  24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பொறியாளர்களாகவோ, மருத்துவராகவோ ஏழை, எளியவர்கள் படிக்க முடிந்தது என்று சொன்னால், அது ப. சிதம்பரம் வழங்கிய கல்விக் கடன் தான் காரணமாகும். இதில் இந்தியாவிலேயே அதிகளவில் பயன் அடைந்ததில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வழங்குவதற்காக 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 87 ஆயிரம் கோடியாக இருந்ததை 2014 இல் ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தியர். இதற்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாகவும், தவணை தவறாமல் கட்டுபவர்களுக்கு 4 சதவிகிதமாகவும் குறைத்தார். இதனால், விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்தனர். 

 

பெருந்தலைவர் காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இதனால் நாடு முழுவதும் உள்ள 12.12 லட்சம் ஆரம்ப பள்ளிகளில் 10 கோடிக்கும் மேலான குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக 2013 இல் ரூபாய் 11 ஆயிரத்து 937 கோடி நிதியை ஒதுக்கினார். மேலும், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ராஜீவ்காந்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், நலிந்த பிரிவினருக்கான திட்டம், தொழிலாளர் நலன் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கம், ராஜீவ் வீட்டுவசதி திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய ஒதுக்கீடு, புதிய ஜவுளிக் கொள்கை, நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு திட்டம், சிறுபான்மை மக்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, பிரதமர் கிராம சாலைகள் திட்டம், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள், தொலைத் தொடர்பு துறையில் இமாலய வளர்ச்சி, பாரத் நிர்மான் திட்டம், ராஜீவ்காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டம், இப்படி சாதனை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

 

முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, ப. சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா ? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? 

 

2004-05 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 54 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோடி. ஆனால் 2014 இல் ஆட்சியை விட்டு விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 674 கோடியாக இரு மடங்காக உயர்ந்தது. இதன்மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

 

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தியதில்  ப. சிதம்பரம் அவர்களின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரம் அவர்களை, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்கு வந்த எடப்பாடி அவர்களே, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

 

ப. சிதம்பரம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.