Skip to main content

’நா கூசாமல் கேட்கிறீர்களே, பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா?’-எடப்பாடி பழனிச்சாமிக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப. சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 10 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்த பொருளாதார சீர்திருத்த செம்மலைப் பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன் ? இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன ?” என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார். 

 

c

 

1984 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்த ப. சிதம்பரம்  மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சராகவும், பிறகு,1991 இல் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார். 

 

1996 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்.   இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனை பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

 

நிதிநிலை அறிக்கை என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை தகர்த்த அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொடர்ந்து, அதே பாதையில் தமது தனி முத்திரையை பதித்தவர். 2004 ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அக்கால கட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முதற்கட்டமாக 150 மாவட்டங்களில் அறிமுகம் செய்தார். பிறகு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றியமைத்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார். 

 

2008 ஆம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். அதனால் பயனடைந்தவர்களின் பட்டியலை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடச் செய்தவரும் இவரே. இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் சமூக சேவை திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பல மடங்காக அதிகரித்தது. 

 

 ப. சிதம்பரம்  தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் வரி விதிப்புகள் கூட இடம் பெறாமல் இருக்கலாம். ஆனால், திருக்குறள் இடம் பெறாமல் இருக்கவே இருக்காது. இதன்மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்த முதல் வேட்டி கட்டிய தமிழரும் இவரே. அனைத்து வரிகள் மீதும் கல்விக்காக 2 சதவீதம் கூடுதல் வரி விதித்து வருமானத்தை பெருக்கியவர்.

 

மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதை உணர்ந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக் கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக  24 லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பொறியாளர்களாகவோ, மருத்துவராகவோ ஏழை, எளியவர்கள் படிக்க முடிந்தது என்று சொன்னால், அது ப. சிதம்பரம் வழங்கிய கல்விக் கடன் தான் காரணமாகும். இதில் இந்தியாவிலேயே அதிகளவில் பயன் அடைந்ததில் ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வழங்குவதற்காக 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூபாய் 87 ஆயிரம் கோடியாக இருந்ததை 2014 இல் ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தியர். இதற்கான வட்டி விகிதத்தை 7 சதவிகிதமாகவும், தவணை தவறாமல் கட்டுபவர்களுக்கு 4 சதவிகிதமாகவும் குறைத்தார். இதனால், விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்தனர். 

 

பெருந்தலைவர் காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இதனால் நாடு முழுவதும் உள்ள 12.12 லட்சம் ஆரம்ப பள்ளிகளில் 10 கோடிக்கும் மேலான குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக 2013 இல் ரூபாய் 11 ஆயிரத்து 937 கோடி நிதியை ஒதுக்கினார். மேலும், அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ராஜீவ்காந்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், நலிந்த பிரிவினருக்கான திட்டம், தொழிலாளர் நலன் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி இயக்கம், ராஜீவ் வீட்டுவசதி திட்டம், பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய ஒதுக்கீடு, புதிய ஜவுளிக் கொள்கை, நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு திட்டம், சிறுபான்மை மக்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, பிரதமர் கிராம சாலைகள் திட்டம், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள், தொலைத் தொடர்பு துறையில் இமாலய வளர்ச்சி, பாரத் நிர்மான் திட்டம், ராஜீவ்காந்தி ஊரக மின்மயமாக்கல் திட்டம், இப்படி சாதனை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

 

முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, ப. சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா ? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? 

 

2004-05 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 54 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோடி. ஆனால் 2014 இல் ஆட்சியை விட்டு விலகுகிற போது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 674 கோடியாக இரு மடங்காக உயர்ந்தது. இதன்மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

 

சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்தி, 2004 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தியதில்  ப. சிதம்பரம் அவர்களின் பங்கை பாராட்டாமல் எவரும் இருக்க முடியாது. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரம் அவர்களை, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்கு வந்த எடப்பாடி அவர்களே, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.

 

ப. சிதம்பரம் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.