Skip to main content

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

ED raids TASMAC Managing Director home

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.025) நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனையை நடத்துவதாக அரசு சார்பில் கூறுவதை ஏற்க முடியாது. எங்களுக்கு முன் உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்தே குற்றம் நடந்துள்ளதா? என விசாரிக்க முடியும். எனவே அமலாக்கத்துறையின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பதை விசாரிக்க முடியாது. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேசநலனுக்கானது. அதே சமயம் சோதனையின்போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (16.05.2025) காலை முதல் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இந்த சோதனையானது நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று சூளைமேடு கல்யாணபுரம் பகுதியில் உள்ள மதுபான நிறுவனத்தின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேனாம்பேட்டைகே.பி. தாசன் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலும், தியாகராயர் நகர், மணப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பெசண்ட் நகர் கற்பகம் கார்டன் பகுதியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பொது மேலாளர் மற்றும் நிர்வாக மேலாளர்கள் உள்ளிட்டவர்களுக்குத் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையின் சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்