Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ பணியிடை நீக்கம்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Echo of Nakkeeran news ... VAO fired for taking

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கொடிவயல் கிராமத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாதிப்படைந்த வயலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு நிவாரணத்திற்குத் தேவையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியிடம் விண்ணப்பிக்க வந்தனர். அப்போது ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.200 லஞ்சமாக பெற்றுக் கொண்டதை ஒரு இளைஞர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டிருந்தார்.

 

இதுகுறித்த செய்தியை நக்கீரன் இணையத்தில் புதன் கிழமை இரவு வெளியிட்டிருந்தோம். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனை விசாரிக்க உத்தரவிட்டார். சார் ஆட்சியரின் விசாரணையில் வீடியோ ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

நக்கீரன் இணைய செய்தி மூலம் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதேபோல அறந்தாங்கி தாலுகாவில் வேற்பனைக்காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்திலும் கிராம உதவியாளர் ரூ.200 லஞ்சம் பெற்று வருவதாகவும், மாவட்டத்தில் பல கிராமங்களில் இப்படி விவசாயிகளிடமே லஞ்சம் வாங்கப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.