81 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளியை மாநில அரசும் கல்வித்துறையும் மூடி மாணவர்களுக்கு 23 ஆம் தேதி மாற்றுச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் 31 மாணவர்களும். பெற்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து பள்ளியை மூடக் கூடாது என்று தொடர்ந்து அமைச்சர், அதிகாரிகளைச் சந்தித்து மனுக்களைக் கொடுத்தனர். ஆனாலும் மாவட்ட கல்வி நிர்வாகம் பள்ளியை மூடுவதிலேயே குறியாக இருந்தது. குறிப்பிட்ட செப்டம்பர் 23 ஆம் தேதி மாற்றுச் சான்றிதழ் வழங்க போலீஸ் பாதுகாப்போடு அதிகாரிகள் பள்ளிக்கு வந்த நிலையில் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த தமிழ்ப் பள்ளியை மூடக் மூடாது என்றும் தமிழின் பெருமையை உலகமெங்கும் சென்று பேசும் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்தில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளியை மூட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தச் செய்திகளை தொடர்ந்து நக்கீரன் இணையதளத்தில் செய்திகளாகவும், வீடியோவாகவும் வெளியிட்டிருந்தோம்.
நக்கீரன் இணைய செய்தி தமிழ்நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கியது. அதன் பயனாக இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.. அந்தக் கடிதத்தில் தமிழ்ப் பள்ளியை மூடும் தகவல் அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஆகவே தமிழ்ப் பள்ளியைத் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கான செலவினங்களை தமிழக அரசு செலுத்தத் தயாராக உள்ளது என்று எழுதி உள்ளார். இந்தக் கடிதம் பற்றி அறிந்த குஜராத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்து தமிழக அரசுக்கும், தமிழக அரசின் கவனத்திற்கு செய்தியைக் கொண்டு சென்ற நக்கீரனுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.
மூடிய தமிழ்ப் பள்ளியைத் திறக்க கடிதம் எழுதிய தமிழக அரசுக்கு நக்கீரன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.