Skip to main content

“நாங்க ரெடி முதலமைச்சர் ரெடியா?”- ஸ்டாலின்  

Published on 31/05/2018 | Edited on 31/05/2018
mk

 

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் “நாங்க ரெடி  முதலமைச்சர் ரெடியா?”- என்ற தலைப்பில் விடுத்துள்ள   அறிக்கை.:

‘’திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த 29.5.2018 அன்று சட்டமன்றத்தில் மிகவும் தெளிவாக, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; புறக்கணிக்கிறோம்”, என்று பேரவைத்தலைவரிடம் கூறிவிட்டுத்தான் அவையில் இருந்து வெளியேறினோம் என்பதை, மாண்புமிகு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது, இன்று (31.5.2018) சட்டமன்றத்தில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் இருந்து தெரிய வருகிறது.

 

ஒரு ஆலையை மூடுவது என்றால், முதலில் அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியைத் திரும்பப்பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில், கடந்த 17.5.1995 அன்று வழங்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி திரும்பப் பெறப்பட்டதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக வெளியான இருபக்க அரசு ஆணையில் இல்லை. அதேபோல், 22.5.1995 அன்று ஆலையை துவக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதல் கடிதம் அந்த ஆணையில் ரத்து செய்யப்படவில்லை.

 

ஆகவே, இந்த அரசாணையானது நீதிமன்றத்தின் முன்பு நிற்க முடியாத, ஒரு அரைகுறை ஆணையாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டித்தான், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுங்கள்; அதில் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை என்று காரண, காரிய விளக்கங்களோடு, சட்டரீதியாக எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடம் தராதபடி தெளிவான, முழுமையான ஒரு கொள்கை முடிவை எடுங்கள்; அதனடிப்படையில் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அந்த ஆலையின் விதிமீறல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் வரிசையாகச் சுட்டிக்காட்டி, விரிவானதொரு அரசு ஆணையை வெளியிடுங்கள்; அதுமட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், நீதிமன்றம் எந்தநிலையிலும் குறுக்கிடாமல் இருப்பதற்கும் ஒரே தீர்வாக அமையும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இன்றுவரை தன்னுடைய அமைச்சரவையை கூட்டுவதற்கே தயங்கி, தாமதித்துத் தடுமாறி வரும் முதலமைச்சர், ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டதாகப் பேசுவது வியக்கத்தக்கதாக மட்டுல்ல; வேடிக்கையாகவும் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை துவங்க முக்கிய அனுமதிகளைக் கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். 250 மீட்டருக்கு “க்ரீன் பெல்ட்” அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பிறகு, 25 மீட்டர் “க்ரீன் பெல்ட்” அமைத்தால் போதும் என்று தளர்த்தி அனுமதித்ததும் அ.தி.மு.க. அரசுதான். “இந்த தாராள மனப்பான்மைக்கு போதிய காரணங்கள் கோப்புகளில் இல்லை”, என்று உயர் நீதிமன்றமே குட்டு வைத்ததை முதலமைச்சர் ஒருவேளை மறந்து விட்டிருக்கலாம்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் எல்லாம் இன்னும் செய்தித்துறையில் பாதுகாப்பாக இருக்கின்றன. வாட்ஸ்அப்பிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வேண்டுமென்றால், செய்தித்துறை அமைச்சரிடம் வாங்கிப் பார்த்து, முதலைமச்சர் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஏதோ ஸ்டெர்லைட் ஆலையை 2013-ல் மூடிவிட்டதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர். கடந்த 29.3.2013 அன்று அப்படியொரு உத்தரவு அ.தி.மு.க. அரசால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நான்கே மாதங்களுக்குள், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறது என்று, அதே அ.தி.மு.க. அரசு அறிக்கை கொடுத்து, தனது இரட்டை நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டது.

 

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை என்பது அ.தி.மு.க.வின் “பேபி” அல்லது வளர்ப்புக் குழந்தை. அதை திடீரென்று எங்களுடையது அல்ல என்று கையை உதறி, தி.மு.க. மீது திசை திருப்ப நினைப்பது முதலமைச்சருக்குக் கொஞ்சம்கூட அழகல்ல. ஆலை விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, நான் அவையில் கூறியிருப்பதாக முதலமைச்சர் பேசியிருப்பது, பொதுவான தொழில் வளர்ச்சி பற்றியதே தவிர, ஸ்டெர்லைட் ஆலை நடந்தே தீர வேண்டும் என்றல்ல. 

அந்த ஆலை விரிவாக்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில், மக்களின் கருத்தை பரவலாகவும், விரிவாகவும் கேட்டறிவதுதான் சட்டரீதியில் சரியானது. அதுவே ஜனநாயக முறையிலான ஒரு அரசுக்கும் அழகு.

 

அதேபோல, ஆலை விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 16.12.2005 மற்றும் 16.2.2006 ஆகிய தேதிகளில் நிலம் ஒதுக்கிய விவரங்களைச் சுட்டிக்காட்டி, நில ஒதுக்கீட்டை தற்போது ரத்து செய்திருப்பதையும், தி.மு.க. ஆட்சியில்தான் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்பது போல மடைமாற்றிப் பேசியிருக்கிறார். ஆகவே, “எப்படி துப்பாக்கிச் சூடு” பற்றியே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக விளக்கம் அளித்தாரோ, அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமலேயே, அரைகுறையாக அவையில் முதலமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கும், தூத்துக்குடி பகுதியையே கொடிய நோய்களின் ஊற்றுக்கண்ணாக மாற்றியதற்கும் அ.தி.மு.க. அரசு எப்படி காரணமானதோ, அதேபோல, இன்றைக்கு 13 பேரை காக்கை குருவி போல் சுட்டுக்கொன்றதற்கு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியே முழு முதல் காரணம்.

 

தான் முதலமைச்சரானதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் பற்றி கூறாமல், தனது நூறு நாள் சாதனைக்கு விழா எடுத்துக்கொண்ட  எடப்பாடி பழனிசாமி அவர்கள், திடீரென்று ஜெயலலிதா புகழ் பாடி; புகலிடம் தேடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், எதிர்க்கட்சி விவாதங்களுக்கு உரிய பதில் அளிக்கவும், ஆர்வமுள்ள எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காரணத்தால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அன்றைக்கு தன்னந்தனியாக வந்து சட்டமன்றத்தில் பங்கேற்றார். அது கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தை நடத்தும் பக்குவத்துக்கும், பழுத்த அனுபவத்துக்கும், கிடைத்த வெற்றியே தவிர எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல, மறைந்த அம்மையாருக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை உணர வேண்டும்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றப் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முதலமைச்சர், “அவர்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் திரும்பி வந்து ஜனநாயக கடமையாற்றுவதற்கு எவ்வித தடையும் கிடையாது”, என்று கூறியிருக்கிறார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைத்து, பணியாற்றுவதில் தி.மு.க.விற்கு, அ.தி.மு.க.வால் எக்காலத்திலும் ஈடு இணையாக இருக்க முடியாது. தமிழக நலனுக்காகக் கொண்டு வரப்படும் தீர்மானங்களில், ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் தி.மு.க.வின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையில் ஒருதுளி கூட அ.தி.மு.க.வுக்குக் கிடையாது என்பதை நாட்டு மக்கள் நன்கு உணருவார்கள்.

 

ஆகவே, சட்டமன்றத்தில் பணியாற்றுவது பற்றி இவர் எங்களுக்கு அறிவுரை கூற முற்படுவது, “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது”, என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு இருந்தால், நாளைக்கே அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, விரிவானதொரு அரசு ஆணையை பிறப்பித்து, நிரந்தரத் தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுத்தால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற கூட்டத்தில் உடனே பங்கேற்கத் தயாராக இருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, அமைச்சரவை முடிவின்படி வெளியிடப்படும் அரசு ஆணை பற்றியும், ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றியும், சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “நாங்க ரெடி; முதலமைச்சர் ரெடியா?” என்பதை உடனே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.