Skip to main content

500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு!!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
 E-pass for 500 rupees in half an hour; sender of audio message;police action

 

 

கரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்கள் மூலம் செல்வதற்கு இ- பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரிய காரணங்கள் தெரிவித்து இ-பாஸ் பெறுவதற்கு பல்வேறு கெடுபிடிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் கடலூரில் ஒருவர் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ்  தருவதாக கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் 500 ரூபாய் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாகவும், இதேபோல் இதுவரை 50,000 இ-பாஸ்கள் எடுத்து தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  மேலும் அவர் இ-பாஸ் எடுக்க தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறி தனது செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.  ஏற்கனவே பல முக்கிய நிகழ்வுகள், அவசிய தேவைகளுக்காக இ-பாஸ்  கேட்டு விண்ணப்பித்தவர்கள் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு 500 ரூபாய்க்கு அரை மணி நேரத்தில் எடுத்து வருவதாகவும், இதுவரை 50 ஆயிரம் பேருக்கு எடுத்து கொடுத்துள்ளதாகவும் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுபற்றி தகவலறிந்ததும் விரிவான விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.