Dy CM Udayanidhi Stalin lively response to the reporter question

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவினையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (09.11.2024) 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் பெருமழை வந்தால் அரசு சந்திக்கத் தயாராக உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “ இன்னும் புயல் ஏதும் உருவாகவில்லை. நீங்கள் உருவாக்காமல் இருந்தால் சரி. எச்சரிக்கை விட்டிருக்கின்றார்கள்.

தென் தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்ற முறை தமிழ்நாடு அரசு எப்படிச் சமாளித்ததோ அதேபோன்று எல்லா விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சில பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்திருந்தோம். சில இடங்களில் தூர்வாரத் தெரிவித்திருந்தோம். கண்டிப்பாக, எவ்வளவு பெரிய மழை வந்தாலும், நம்முடைய அரசு சமாளிக்கும். மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கின்றேன்.

விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம். இரண்டு நாட்களில் தூத்துக்குடி செல்ல உள்ளேன். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளார். நானும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் ஆகியோர் கலந்து கொண்டனர்.