கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவருகிறது. இதற்கிடையே அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்திற்குப் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் முடிவைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச டெல்லி சென்ற தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தினார்.