Skip to main content

பல வருடங்களுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட குளம்... போர்குழாயில் பொங்கி ஊற்றும் தண்ணீர்...

Published on 14/01/2021 | Edited on 16/01/2021

 

ff

 

தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்ற தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்நிலைகள் பல வருடங்களாக மராமத்துச் செய்யாமல் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் வறட்சி தாண்டவமாடியது, சில இடங்களில் நிலத்தடி நீரும் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. 

 

நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே போனதால் இனிமேல் குடிக்கக் கூட தண்ணீர் கிடைப்பது அறிதாகிவிடும் என்ற நிலையில் தான் புதுக்கோட்டை, தஞ்சாவூர் கடைமடைப் பாசனப் பகுதிகளை உள்ளடக்கி கைஃபா என்ற அமைப்பை உருவாக்கிய இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இவர்களுடைய பொருளாதார உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 70 பெரிய நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரை நிரப்பினார்கள்.

 

இதன் பலனாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால் இனி வரும் வருடங்களில் இன்னும் நிறைய நீர்நிலைகளைச் சீரமைக்க உறுதி எடுத்துள்ளனர். 

 

இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை கைஃபா இளைஞர்கள் சீரமைத்தனர். 

 

சீரமைப்பிற்குப் பிறகு குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. குளம் நிரம்பியதால் நிலத்தடி நீரும் வேகமாக மேலே வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 150 அடிக்கு கீழே இருந்த தண்ணீர் இப்போது பொங்கி ஊற்றுகிறது.

 

கடந்த சில மாதம் முன்பு 170 அடியில்இருந்து தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் இப்போது கடந்த ஒரு வாரமாகத் தொடர் மழையாலும் குளம் நிரம்பியுள்ளதாலும் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் பொங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

கோடையிலும் விவசாயம் செய்வதற்கேற்ப நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்கினால் அனைத்துக் கிராமங்களிலும் நிலத்தடி நீரை உயர்த்தலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.