கரோனா பரவல் அதிகரித்துவருவதால், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு பேராலய முகப்புகளில் தடுப்புகள் கொண்டு அடைத்துள்ளனர்.

Advertisment

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திலும் பொது வழிபாட்டிற்கு தடை விதித்து, பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. பேராலய முகப்புகளை தடுப்புகளைக் கொண்டு அடைக்கப்பட்டதுடன், ஆலயக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. வழக்கமாக நடக்கும் வழிபாடுகள், பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டின் காரணமாக இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல், உள்பிரகாரத்தில் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதனால் பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு, உள்பகுதியில் மாதா சொரூபம் வைக்கப்பட்டுள்ளது. அதனை வெளியில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

Advertisment

இதனிடையே கடற்கரைக்குச் செல்லவோ, சுற்றிப் பார்க்கவோ சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மாவட்டக் காவல்துறை தடை விதித்துள்ளது. அதன் காரணத்தால், எப்பொழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரையும், கோயிலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.