குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சுகுமாரன் சுயநினைவின்றி கிடப்பதாகக் கூறி கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தார் கொண்டு சென்றனர். சுகுமாரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறி உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்பொழுது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சுகுமாரனின் மகனிடம் விசாரித்தபோது நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுகுமாரன் ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அவருடைய உறவினர் சதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுகுமாரனை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருப்பினும் அவர் ரகளையில் ஈடுபட்டதால் வாயில் துணியை வைத்து அழுத்தி தனி அறைக்கு கொண்டு சென்று கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை பார்த்த பொழுது சுகுமாரன் சுயநினைவின்றி கிடந்த நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் மற்றும் சதீஷை கைது செய்துள்ளனர்.