
விருதுநகரில் மதுபோதையில் கும்பல் ஒன்று காவலர்களை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள ஆவரம்பட்டி பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் கும்பலாக பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இசக்கி என்ற நபரை மதுபோதையில் இருந்த கும்பல் தாக்கியுள்ளது. ரத்த காயத்துடன் இசக்கி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட போதை நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக நேரு சிலை பின்புறம் உள்ள தனியார் மதுக்கடைக்கு அருகே சென்றுள்ளனர்.
அப்பொழுது போதையில் தகராறில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்த காவலர் ராம்குமார், கருப்புசாமி ஆகியோர் மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு அந்த நபர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த கும்பல் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்கள் கையில் இருந்த லத்தியை வாங்கி காவலர்களை சரமாரியாக தாக்கினர். உடனடியாக இங்கு வந்து மற்ற காவலர்கள் காயமடைந்த இரண்டு காவலர்களையும் விட்டு மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் காவலர்கள் போதை கும்பலால் தாக்கப்பட்ட அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆவரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா, பாண்டியராஜ் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தற்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.