Skip to main content

குடித்துவிட்டு ரகளை செய்த கணவன்; கொதிக்கும் தண்ணீரில் மிளகாய்ப்பொடி கலந்து ஊற்றிய மனைவி

 

Drunken husband; Wife who mixed chili powder with boiling water

 

குடிபோதையில் ரகளை செய்த கணவன் மீது மனைவியும் மாமியாரும் சுடு தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து ஊற்றியதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி டயானா மேரி. இந்த தம்பதிக்கு தற்பொழுது வரை குழந்தை இல்லாத நிலையில் செல்வராஜ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதேபோல் தொடர்ந்து குடிப்பழக்கம் கொண்டவராக இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த தகராறு காரணமாக டயானா மேரி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

 

இந்நிலையில், சமீபத்தில் செல்வராஜ் தனது மனைவி மேரியை அனுப்பி வைக்கும்படி மாமியார் வீட்டிற்கு போதையில் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மேரியை செல்வராஜ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டயானா மேரி வீட்டில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து கணவர் செல்வராஜ் மீது ஊற்றியுள்ளார். அலறித் துடித்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜ் மனைவியான மேரி மற்றும் அவரது மாமியார் இன்னாசியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !