Skip to main content

மதுபோதையில் கணவன் கொடுத்த டார்ச்சர்; வீட்டிற்குள் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Drunken husband incident his wife

 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருநீலம் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 32 வயதான இவர், தான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், புருஷோத்தமனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகே உள்ள ஆர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான முனியம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், புருஷோத்தமனுக்கும் முனியம்மாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக புருஷோத்தமனுக்கும் முனியம்மாவுக்கும் ஏற்பட்ட தகராறு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்நிலையில், புருஷோத்தமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இத்தகைய சூழலில், காலப்போக்கில் மது போதைக்கு அடிமையான புருஷோத்தமன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அந்த நேரத்தில், தள்ளாடிய போதையில் வீட்டிற்கு வரும் புருஷோத்தமன் தன் மனைவி முனியம்மாவிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர்களுக்குள் மோதல் முற்றி, மனைவி முனியம்மா மற்றும் குழந்தைகளை புருஷோத்தமன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முனியம்மா தினந்தோறும் கண்ணீரில் நாட்களை கழித்து வந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், புருஷோத்தமனின் செயலால் பயந்துபோன முனியம்மா, அவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் ஆர்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், இது புருஷோத்தமனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தாய் வீட்டிற்குச் சென்ற முனியம்மாவும் வீடு திரும்பவில்லை. அப்போது, புருஷோத்தமனுக்கு முனியம்மா மீது ஏற்பட்டிருந்த கோபம் குடி போதையில் வெறியாக மாறியுள்ளது. அன்றைய நாள் ஒரு கோர திட்டத்துடன் புருஷோத்தமன் ஆர்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 

அப்போது, குடிபோதையில் இருந்த புருஷோத்தமன் தன் மனைவி முனியம்மாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். போதையில் அவரை துன்புறுத்தியபடி வீட்டுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு ஒத்துழைக்காத முனியம்மா தன்னுடைய முடிவில் சரியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் முனியம்மாவை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்த டேபிள் ஃபேன் வயரால் கழுத்தை இறுக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முனியம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும், இதில் படுகாயமடைந்த முனியம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

அதன்பிறகு, சுதாரித்துக்கொண்ட புருஷோத்தமன், தன்னுடைய மனைவி முனியம்மாவின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, ஒரு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ரத்தக் கரையுடன் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் புருஷோத்தமனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர். அதன்பிறகு, முனியம்மாவின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, புருஷோத்தமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை தேடித் சென்று கொலை செய்த சம்பவம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்