
சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் பெண் ஒருவர் குடிபோதையில் சாலையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளார். இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில் போதையில் தள்ளாடிய அந்தப் பெண்ணை கண்டு பொதுமக்கள் விழி பிதுங்கி நின்றனர். ஒரு கட்டத்தில் போதை உச்சம் தலைக்கு ஏறியதால் அந்தப் பெண் அப்படியே சாலையில் மயங்கி விழுந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை தண்ணீர் தெளித்தும் தேநீர் வாங்கிக் கொடுத்தும் போதையைச் சற்று தெளிய வைத்து விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணின் பெயர் ரேவதி என்றும் அவரை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ரிங் வேலை செய்து வரும் ரேவதியின் கணவர் குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் தனியாகத் தவிக்கவிட்டுவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரேவதி மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகத் தனது ஆதங்கத்தை போலீசாரிடம் கொட்டித்தீர்த்துள்ளார்.
இதையடுத்து ரேவதிக்கு அறிவுரை கூறிய போலீசார், ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.