Skip to main content

பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா...? - ட்ரைவரின் காதைக் கடித்து துப்பிய போதை ஆசாமி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

 drunk driver bit the ear and spat on it
போதை ஆசாமி

 

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதியன்று சிவகங்கையில் இருந்து மதுரை செல்ல இருந்த அரசுப் பேருந்து ஒன்று, பேருந்து நிலையத்தில் தயாராக இருந்தது. அந்தச் சமயம், அந்தப் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சாப்பிட சென்றுள்ளனர்.

 

இதனிடையே, மதுரை செல்லத் தயாராக இருந்த பேருந்தில் பயணிகளும் கணிசமாக ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கும் இங்குமாய்ச் சுற்றித் திரிந்துள்ளார். இதனிடையே, அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் தள்ளாடிக்கொண்டே ஏறியுள்ளார். மேலும், அவர் சீட்டில் உட்கார்ந்த பிறகு அங்கிருந்த பயணிகளிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அந்த போதை ஆசாமியால் பயணிகளுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. 

 

இத்தகைய சூழலில், அந்தப் பேருந்து டிரைவர் இல்லாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றுள்ளது. அப்போது, அந்த ஆசாமி, "பஸ்ஸ எப்போ எடுப்பாங்க. டிரைவர் எங்க போனாரு" என புலம்பிக்கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தலைக்கேறிய போதையில் இருந்த ஆசாமி, தள்ளாடிக்கொண்டே டிரைவர் சீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், பயணிகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் டிரைவர் இல்லாத அந்தப் பேருந்தை தானே இயக்க முற்பட்டுள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், திடீரென கூச்சலிடத் தொடங்கினர். பின்னர், இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட டிரைவர், உடனடியாக பேருந்திற்குள் ஓடிவந்து அந்த போதை ஆசாமியைக் கீழே இறக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் கீழே இறங்கியதும் டிரைவருக்கும் போதை ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 

மேலும், இது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நபர், அந்த டிரைவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னை பஸ்சை விட்டு இறக்கிவிட்ட கோபத்தில் அவரது காதைக் கடித்து கீழே துப்பியுள்ளார். இதற்கிடையில், ஆசாமியின் செயலால் பதறிப்போனவர்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

 

இதையடுத்து, காயமடைந்த பஸ் டிரைவர் இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்  கீழக்கொம்புக்காரனேந்தல் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே சமயம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்த போதை ஆசாமி ஒருவர், பஸ் டிரைவரின் காதைக் கடித்து துப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.