Skip to main content

மது போதையில் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை; சக தொழிலாளி கைது

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மதுபோதையில் சக கட்டிடத் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள எஸ்.மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (30) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் உறவினர்களான தனசேகரன் (29), தங்கச்சாமி (53) உள்பட 5 பேர் கீரமங்கலம் அண்ணாநகர் கட்டிட ஒப்பந்தக்காரர் லட்சுமணனிடம் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். தற்போது மேற்பனைக்காடு கிராமத்தில் கட்டிடம் கட்டும் இடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முருகன், தனசேகரன், தங்கச்சாமி ஆகியோர் கீரமங்கலம் வந்து மது குடித்துவிட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முருகனுக்கும் தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் தனசேகரன் அருகில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து முருகன் மண்டையில் பலமாகத் தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சாய்ந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதியில் நின்றவர்கள் தனசேகரனை பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மதுபோதையில் சக தொழிலாளியை மண்டையில் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்