போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட  முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதில், ஏ1 குற்றவாளி பிரதீப் குமார் கொடுத்த தகவல் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்தனர். ஏ2 குற்றவாளியாக ஜான் என்பவர் உள்ளார். ஏ3 குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை சேர்த்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. Narcotic Drugs And Psychotropic Substances Act- NDPS 8(C), 29(1), 22(b) உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் இல்லத்தில் இருந்து ஒரு கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண்ட காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், நேற்று சரியாக 2 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரான கிருஷ்ணாவிடம் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது நெகட்டிவ் என வந்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட  உடல்நிலை பிரச்சினை இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. தன்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் பொய் என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.  வாட்ஸ் அப் சேட், பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை போலீசார் கேட்டுப் பெற்று அது தொடர்பாக விடிய விடிய நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.