இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியதோடு பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடங்களிலும், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை சுற்றிலும் ட்ரோன்கள் மூலம் கிருமி நானிசி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை மாநகராட்சி அலுவலமாகச் செயல்படக்கூடிய ரிப்பன் மாளிகையில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.