Skip to main content

மாணவர்களின் பாதுகாப்புக்காகப் பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர்! 

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

The driver who refused to run the bus for the safety of the students!
மாதிரி படம் 

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சி உட்பட பல கிராமங்களும் அடங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான பேர் தினசரி பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் காலை மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது. 

 

நேற்று அரசு பேருந்து ஒன்று திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதில் பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். இதனால் ஓட்டுநர், பெண்ணாடம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். 

 

அவர்கள், பேருந்தின் உள்ளே இடம் இல்லாமல் மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் எப்படி உள்ளே போக முடியும் என்று ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இப்படி பயணிக்கும்போது மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய எங்களை இடை நீக்கம் செய்து, பின் வழக்கு என சிக்கல் வரும். உங்களுக்கும் இது பாதுகாப்பு இல்லை. அதனால், பேருந்தின் உள்ளே சென்றால் பேருந்தை எடுப்பேன் என்று சொல்லியுள்ளார். 

 

இதனால் பயணிகளுடன் பேருந்து அந்த இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வேறு ஒரு பேருந்தை நிறுத்தி அதில் மாணவர்கள் பலர் ஏறி சென்றனர். அதன்பிறகே நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை விருத்தாசலம் நோக்கி ஓட்டிச் சென்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.